மெட்ரோ பகுதிகளில், இன்று (ஜூன் 1) முதல் மானியமில்லாத சிலிண்டரின் விலை 11.50 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், மெட்ரோ பகுதிகளில் மானியமில்லாத சிலிண்டரின் விலை 11.50 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தில்லியில், மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ.11.50 உயர்த்தப்பட்டு ரூ.593 ஆக உள்ளது. மும்பையில் மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ.11.50 உயர்த்தப்பட்டு ரூ.590.50 ஆக உள்ளது. கொல்கத்தாவில் மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ.31.50 உயர்த்தப்பட்டு ரூ.616 ஆக உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக சிலிண்டரின் விலை ரூ.37 உயர்த்தப்பட்டு ரூ.606.50 ஆக உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக மெட்ரோ பகுதிகளில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.